Monday, March 22, 2010

உரையாடல்...

மதிமயக்கும் மாலைவேளை
தென்றலின் தாலாட்டில்
வெந்தணிந்த வெய்யிலின்
சுகம் கன்னம் வருட
உள்ளமெலாம் உற்சாகம்;

சாலையோர சோலைதனில்
சாய்ந்திருந்த நாற்காலியில்
சற்றே சரிந்திருந்தப்போது
இனியக் குரலொன்று
இதயம் தொட்டது செவிவழியே!

“மண்ணலம் பேணா – இம்மூடர்தமை
மனிதரென்றே உரைக்கின்றார்
மனிதத்தை மறந்துவிட்டு
தன்னலத்தில் திளைக்கின்றார்”

இனிதான குரலில்
இதயம் துளைக்கும்
வார்த்தைகள் கூர்மையோடு;

யாரென்ற ஆவலினால்
நாற்புறமும் நோக்கினேன்;

தூரத்தே முதியவரொருவர்
தொலைந்துப் போனதெதையோ
துரிதமாகத் தேடியப்படி;

சற்றே தள்ளி
சடுகுடுவில் பாலகர்கள்;

யார் இவர்?
குழப்பத்தி லாழ்ந்தப்போது
குரலொலி மீண்டும்!

“அருகிலிருப்பதையறியாமல்
அண்டமெலாம் தேடலில்;
மனிதம் காக்கவே துப்பில்லை
மரத்தையும் மண்ணையும்
காப்பரோ – இம்மூடர்”

சினத்தில் முகம்
சிவக்க தேடினேன் – அருகே
சிறுசெடியின் மலரிதழில்
தேனியொன்றை நோக்கி!!
பூச்சியும் பேசுமோ – சந்தேகம்

பூவுக்கு முன்பே
மீண்டும் ஒலித்தது
அக்குரல்!

“இவ்வுலகதந்தனில்
மரமும் பேசும்
மலரும் பேசும் – அனைத்து
உயிர்களும் பேசும்!

மானிடரோ தாம்மட்டும்
பேசுவதாயெண்ணி
தற்பெருமை கொள்கின்றார்;
தலைக்கனம் பிடித்து
தன்னலத்தால்
மண்ணலமும் மறக்கின்றார்!

தேனியின் குரல்தான் உணர்ந்தேன்!
“சிறுபூச்சி நீ
மூச்சுவிட்டாலே
மூன்றடி தூரம்போவாய்!
வாயை நீட்டி
வார்த்தைகளடுக்குகின்றாய்;
மானிடத்தின் மகிமையறிவாயா நீ?!

வானமளக்கின்றோம்
கடல் வென்றோம்
மலையாழ்கின்றோம்;
மழை பொழிவிப்போம் – மன்னதனிலே
காற்றையும் மின்சாரமாக்குவோம்;
அறிவியலில் வல்லோர்யாம்
அனைத்து மறிவோம்
அனுவையும் பிளப்போம்;
உன்னாலென்ன முடிந்தது
உன் குலத்தாலனதென்ன
உணராமல் பேசி உதைப் படாமல்
உன் வேலையைப் பார்”

மூச்சிறைத்தது எனக்கு
முடிப்பதற்குள்!

புன்னகயோடு மீண்டும்
பாடியது தேனி!

விதைகளில்லா மரம்படைத்து
வித்திட்டீர் காடுகளழிவிற்கு – அதனால்
இயற்கைமழை யற்றுப்போக
செயற்கை மழைக்கு
விதைத்தேடி யலையும்
வீனர்கள் நீங்கள்!

ஓசோனைக் கிழித்தெறிந்து
ஓய்வெடுக்கின்றீர் குளிரறையில்
உலகமே மூழ்குமோர் நாள்
உருகுகின்ற பனிமலையதனால்;
உணர்வீர் நீரானாலும்
உருப்படியாய் செய்ததென்னதற்கு!

பயனிலா மனிதன் அவனை
மண்ணென வையும் மடையீர் – நீர்
காணும் பொருள் யாவும்
மண்ணின்றி தோன்றலாகாது என்பதை
மறுக்கவும் வழியுண்டோ!?

மண்ணிலன்றி வந்தவை யிதுவென
ஓர் துகளையும்
கண்ணில் காட்ட முடியுமோ
உன்னால்!!!?
மண்ணைத் தோண்டி
விண்ணை முட்டும்
கட்டிடஙகளே
காணுமிடம் யாவும்!

பள்ளமான இடம் தேடி – பூமிப்
படுக்கைகள் நகரும்போது
சுனாமியை மட்டுமின்றி
சுட்டெரிக்கும் தனலையும்
தன் மேற்பரப்பில்
விதைக்கின்ற நாள்
வெகுதூரமில்லை – இப்
பூமிப் பெண்ணிற்கு!

இது புரியாமல்
விஞ்ஞானம் பேசிப் பேசி
அஞ்ஞானம் அறியா
அறிவீலிகளடா நீங்கள்
ஆனாலும் சொல்லிக்கொண்டீர்
அறிவாளிகளென்று!!!!

ஹ்ம்ம்…..
சாடியாகப்போவ தொன்றுமில்லை
காடுகள் பெருக்கிட வேண்டும் – நானதற்கு
மலர் தாவ வேண்டும்
மகரந்தம் எடுக்க
மனிதனல்ல நான்
விஞ்ஞானம் பேசி
வீணாய் பொழுதைக் கழிக்க

மறுமொழி பாராமல்
மலர் தாவிய தேனி
மனதில் நின்றது…

மரம் வளர்த்து மண் வளம் காப்பதே
மனித வாழ்க்கையில்
மகத்தான பணியென – என்
மனதில் தோன்ற
மரக்கிளைகள் மௌனமாய்
தலையசைத்தது
மென் தென்றல் முகம் வருட!!

என் வீதியில்...

இன்று
வானம் பார்த்தேன்

ஒரே வரிசையில் நீண்டன நட்சத்திரங்கள்
சதுரமாய் சிரித்தது நிலவு

மணலலைகள் கிளம்பி
கடலுக்குள் சென்றன
கரையிலிருந்து
திமிங்கலம்
ஒன்றை விழுங்கியது
சின்ன நெத்திலி

பகலிலேயே அல்லிகள் பூக்க
பாலையிலிருந்து பீறிட்டன நீரூற்றுகள்

பூமி தொடவில்லை பாதங்கள்
சிறகு விரித்து பறக்கத் தொடங்கினேன்
ஒன்பதாம் திசையில்
பட்டமரமொன்றில் அமர புஷ்பித்தது
இலைகளில் இருந்தும் கமழ்ந்தது சுகந்தம்

தீத்தொட தித்திக்கிறது இனிப்பாய்
மாலைச் சூரியன் பொழிந்தான் பனிமழை

இன்று ஏன் வானம் பார்த்தேன்?

நியதிகளின் சுமை...

தூக்கத்தின் நேரம் கழிந்தும்
வெள்ளியோடு பேசிய வார்த்தைகளில்
கிழிந்துவிடவில்லை இருள்

இயந்திர ஓட்டத்தில்
சிக்குண்டு நசுங்கிய அரிசியாய் வலி

கண்கள் மயங்கி சோர்வு
நிமிர்ந்து உட்காரத் திமிர்ந்தும்
கேள்வியாய் முதுகு

கணவனுக்கு சாப்பாடு
பெற்றோருக்கு பத்தியம், மருந்து, மாத்திரை...
முகத்தில் அசதி மறைத்து
மேலாளரிடம் புன்னகை

மீட்க முடியாத அதிர்வின் இழப்பில்
நெற்றியில் முத்து முத்தாய்
வியர்வைத் துளிகள்

கொஞ்சமே கொஞ்சம் இதம் தடவி
வருடும் இதயம் வேண்டி
இமை மூடி மௌனம்
எனக்கான வாழ்வனுபவம்

வலி உணரும் மக்களாக
மனிதர்கள் மாறுவது
எப்போது ?